என் புரிதலில் இயற்கை விவசாயமென்றால் வேதிப்பொருள் கலந்த உரங்களைப் பயன்படுத்தாமல்,மரபனு கலப்பின விதைகளை பயன்படுத்தாமல் இயற்கையாக கிடைக்கும் விளைபொருட்களை கொண்டே செய்யப்படும் விவசாயம்.ஆனால் இந்த புத்தகத்தைப் படித்தபிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று நிலம் உழுதல் கூட இயற்கை விவசாயத்தில்(ஏர் பூட்டியோ அல்லது ட்ராக்டர் உதவியுடனோ) தேவையில்லாதது.எவ்வாறு காட்டில் யாருடைய முயற்சியுமின்றி மரங்கள் வளர்ந்து காய்கனிகள் காய்க்கின்றனவோ , அதேபோல விவசாயமும் இயற்கையிடமே விட்டுவிடப்படவேண்டும்.
விவசாயி விதைகளைத் மட்டும் தூவிவிட்டு அறுவடை செய்யும் வரை எந்த வேலையும் செய்யாமல் இருத்தலே போதுமானது.நிலம் உழுதலே இயற்கை வேளாண்மைக்கு தேவையில்லாத்து என்பது ஆச்சர்யமளிக்கும் செய்தி.பூச்சிகளும் மண்புழுக்களுமே தன்னிச்சையாக நிலம் உழுதலை செய்துவிடுகின்றன.நாமாக உழும்போது இப்படிப்பட்ட மண்புழுக்கள் இறப்பதற்க்கும் ,முளைக்கவே முடியாத களைச்செடிகள் முளைத்துவிடும் வாய்ப்பும் உள்ளதால் நிலம் உழுதலே தேவையில்லாதது என்கிறார் ஆசிரியர்.
களைகளை நீக்க வைக்கோலை வயலில் பரப்புவதே போதுமானது.இந்த வைக்கோலே களைகளை வளராமல் தடுத்துவிடுவதால் தேவையேயில்லாமல் களைகொல்லிகளை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.மேலும் வைக்கோல் மட்கி நாளடைவில் மண்ணின் வளம் பெருகுகிறது.களிமண் உருண்டைகளில் விதைகளைத்தூவி விதைத்தலும் களைகளை அகற்ற போதுமானது.
தாவரங்களை தாக்கும் நோய்க்கிருமிகளை அழிக்கவே உரம் பயன்படுத்தப்படுகிறது.ஆனால் இந்த நோய்க்கிருமிகளை உண்ணும் பூச்சியினங்கள் இயற்கையாகவே உள்ளதால் அவைகளே போதுமானது.விவசாயிகள் செய்யவேண்டியதெல்லாம் இப்படிப்பட்ட பூச்சியினங்களை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் போதுமானது.மசானு ஃபுகோகா கூற்றுப்படி இயற்கை வேளாண்மையில் விவசாயி ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்திற்க்கு மேல் வேலை செய்யவேண்டிய அவசியமில்லை.அவர் கூற்றுப்படி விவசாயிக்கு ஏராளமான ஓய்வுநேரம் கிடைக்கும்.அதில் அவர்கள் கவிதை,கலை போன்றவற்றிற்க்கு நேரம் செலவழித்து மகிழலாம்.
மசானு ஃபுகோகா நுகர்வோருக்கு சொல்லும் அறிவுரை அந்தந்த பருவ காலங்களில் விளையும் பழங்கள் காய்கறிகள் தானியங்களே உணவிற்க்கு சிறந்தது.பருவம் தவறி விளையும் பழம் காய்கறிகள் உடல் நலத்திற்க்கு கேடானது.இயற்கை வேளாண்மையில் பொருட்கள் விலை குறைவாகவே இருக்கமுடியும்.காரணம் வவசாயியின் உழைக்கும் நேரம் குறைகிறது.உரம்,விதை செலவுகள் அறவே இல்லை.அதனால் விளைபொருள் விலையும் குறைவாகவே இருக்க முடியும்.
மசானு ஃபுகோகா இயற்கை வேளாண்மை பற்றி மட்டும் பேசவில்லை.தத்துவம்,ஆன்மீகம் மற்றும் மேலை கீழை தேச தரிசனங்கள் என பல தளங்களுக்கு பயணம் செய்கிறார்.கண்மூடித்தனமான அறிவியல் ஆதரவை விமர்சிக்கிறார்.அணுஆயுத ஆபத்தும்,அணுஉலை கதிர்வீச்சு ஆபத்தும், போப்பால் விஷவாயு கசிவும் , சமீபத்திய கரோனா வைரஸும் அறிவியலின் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த நூல் வெறும் வேளாண்மை பற்றிய நூல் மட்டுமல்ல.இது ஒரு வாழ்கை வழிகாட்டி.
மசானு ஃபுகோகா wiki link : https://en.wikipedia.org/wiki/Masanobu_Fukuoka
(இந்த விமர்சனம் கரோனா காலகட்டத்தில் (2020) ஒரு நோட்டுப்புத்தகத்தில் எழுதப்பட்டது.)
கருத்துகள்
கருத்துரையிடுக