இந்த நாவல் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்பதைத்தான் சொல்கிறது.இந்த கதை முழுவதும் சொல்லப்படுவது ஒரு பணக்கார,புத்தகபுழுவாக , எப்போதும் தத்துவ தேடலுடன் உள்ள ஒருவர் மூலமாக சொல்லப்படுகிறது.அவர் தற்செயலாக ஃகபே ஒன்றில் ஜோர்பாவை சந்திக்கிறார்.ஜோர்பா தனக்கு நன்றாக சமைக்கத் தெரியும் என்றும் Santuri இசை கருவியை நன்றாக வாசிக்கத் தெரியும் என்றும் தனக்கு ஏதாவது வேலை கொடுத்தால் தங்களுடனே வந்துவிடுவதாகவும் கதைசொல்லியிடம் கேட்கிறார்.ஜோர்பாவின் பேச்சு ,தோற்றம் இவையெல்லாம் முதல் சந்திப்பிலேயே கதை சொல்லியை ஈர்க்கிறது.ஜோர்பாவை வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார்.அதற்குபின் ஜோர்பாவின் கடந்த காலம் துண்டுதுண்டாக விவரிக்கப்படுகிறது.
ஜோர்பாவுக்கு மறுபிறவி,சொர்கம்,நரகம் போன்ற கருதுகோள்களில் நம்பிக்கையற்றவர்.ஜோர்பாவின் தத்துவப்படி கடவுளும் சாத்தானும் ஒன்றே.மகிழ்ச்சி என்பது இந்தப் பிறவியில் இந்த பூமியில் மட்டுமே சாத்தியம்.அதை இங்கு அனுபவிக்காமல் அது வேறு எங்கோ உள்ளது என்பதிலெல்லாம் நம்பிக்கையற்றவர்.
கதைசொல்லி வாழ்கை தொடர்பான தத்துவார்த்தமான கேள்விகளுக்கு விடைதேடி புத்தகத்தை நாடுகிறார்.தினசரி நடைமுறை வாழ்கையிலிருந்து அவர் பெரிதாக எதையும் பெற்றுகொள்ளவில்லை.மாறாக ஜோர்பா எந்த பெரிய படிப்பறிவும் இல்லாமல் தன் வாழ்கையின் மூலமே அனைத்தையும் கற்றுக்கொள்கிறார்.கதைசொல்லி தேடும் கேள்விக்கான விடையை ஜோர்பா தெரிந்து வைத்திருக்கிறார், ஒரு புத்தகத்தை கூட படிக்காமல்.கதைசொல்லிக்கு ஜோர்பா மேல் பிரமிப்பும் மரியாதையும் நாளுக்குநாள் வளர்கிறது. ஜோர்பா ஒரு வேலையாளாக இருந்தாலும் கதைசொல்லி அவரை ஒரு ஆசிரியராக வழிகாட்டியாகவே பார்க்கிறார்.
பேசிப்பேசி புரியவைக்க முடியாத விஷயங்களை தன் நடனம் மூலம் மற்றவர்களுக்கு புரியவைக்கிறார்.அதாவது சொற்களால் விளக்க முடியாத உணர்வுகளை நடனம் மூலம் கடத்துகிறார்.ஜோர்பாவின் கருத்துப்படி ஒரு ஆசையிலிருந்து விடுபடுவதென்பது அதை முற்றாக தவிர்த்து எதிர்திசையில் செல்வதல்ல.மாறாக அதை திகட்ட திகட்ட அனுபவித்து அதிலிருந்து வெளியேருவது.அதை தவிர்ப்பதென்பது ஒரு பாசாங்குதான், அதன் ஏக்கம் என்றும் நம்முள் இருக்கும்.
ஜோர்பா எதைச்செய்தாலும் அதில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொள்கிறார்.அது பெண்ணுடன் காதலாக இருந்தாலும் சுரங்க வேலையாக இருந்தாலும் Santuri இசை கருவியை மீட்டுவதாக இருந்தாலும் முழு ஈடுபாடு.ஒரு உரையில் Steve Jobs "Stay Hungry,Stay Foolish" என்று சொல்லியிருப்பார்.அவர் அதை இந்த நாவலிலிருந்து பெற்றிருப்பார் போல.நாவல் முழுவதும் ஜோர்பா சொல்ல வருவதும் இதைத்தான்.வாழ்கையில் மகிழ்ச்சியாக இருக்க நாம் எப்போதும் புத்திசாலிகளாகவும் அதிக செல்வத்துடனும் இருக்க வேண்டிய தேவையில்லை.கொஞ்சம் முட்டாள்தனமும்(குழந்தைமைதனம்) இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நம்மை சுற்றி நடப்பவற்றை ரசிக்க முடியாது.
நாவல் முழுவதும் காட்டப்படும் நிலகாட்சிகள், கதை மாந்தர்கள் அனைத்தும் சிறப்பு.Madam Hartense இறந்தவுடன் அங்கு funeral songs பாடவரும் நபர்கள் ,பின் அங்கு நடப்பவை எல்லாம் இந்தியாவில் ஒரு கிராமத்தில் எப்படி நடக்குமோ(ஒப்பாரி) அதேபோல் உள்ளது.கணவரையிழந்த பெண்களின் நிலைமை நூறாண்டுகளுக்கு முன் இந்தியாவில் எப்படி இருந்ததோ அதேபோல்தான் க்ரீஸ்ஸிலும் இருந்ததாக தெரிகிறது.ஆன்மீகம் என்ற பெயரில் தேவாலயத்தில் நடக்கும் கொடுமைகளை சிறப்பாக காட்டியிருக்கிறார்.
ஜோர்பா இளமையில் மிகத்தீவிரமாக போர்களில் ஈடுபட்டு நாட்டுக்காக பல கொலைவெறிச்செயல்களில் ஈடுபடுகிறார்.ஆனால் கொலை செய்யப்பட்ட ஒருவரின் குழந்தைகள் பின்னர் பிச்சை எடுப்பதை பார்த்துவிட்டு அன்றிலிருந்து மாறிவிடுகிறார்.நாடு,கடவுள்,குடும்பம்,தொழில்,பணம் என்ற எல்லா தளைகளையும் அறுத்தெறிந்துவிட்டு புதிய ஜோர்பாக மாருகிறார்.எல்லா தளைகளையும் அறுத்தெரிவதே விடுதலை.ஆனால் அதை செய்வது சுலபமல்ல.ஆனால் அதை செய்யுமாரு கதைசொல்லியை தூண்டுகிறார்.ஆனால் கதைசொல்லி அதை விரும்பினாலும் கடைசிவரை செய்யவில்லை.ஆசிரியர் இதை கீழை தத்துவங்களிலிருந்து பெற்றிருப்பார் போல.இங்கும் இதேபோல் துறவறம் சொல்லப்படுகிறது.ஆனால் ஜோர்பா சொல்வது துறவறமல்ல.எல்லா தளைகளிலிருந்தும் விடுபட்டு எந்த கீழ்மையான செயல்களிலும் ஈடுபடாமல் வாழ்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கச்சொல்கிறார்.மகிழ்ச்சி என்றால் காதல்,நல்லுணவு,ஊர் சுற்றுதல்....
ஜோர்பா போல் வாழ்வது எந்தளவுக்கு சாத்தியம் என்று தெரியவில்லை.ஆனால் அவர் போல் வாழவேண்டுமென்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறார்.தற்போதைய இயந்திர வாழ்வில் என்ன செய்கிறோம்,ஏன் செய்கிறோம் , எங்கு சென்றுகொண்டிருக்கிறோம் என்ற புரிதலேயில்லாத சூழ்நிலையில் ஜோர்பா ஒரு நல்லாசிரியராக தெரிகிறார்.ஜெயமோகன் அடிக்கடி குறிப்பிடும் நாவல்,அவர் தளம் மூலமாகவே இந்த நாவல் பற்றி தெரிந்து கொண்டேன்.அவருக்கு என் நன்றி !!

கருத்துகள்
கருத்துரையிடுக