முதற்கனலில் மானசாதேவி,அவள் மகன் ஆஸ்திகன் அவர்களுடைய வீடு, காடு என அனைத்தும் என் கண்முன் உள்ளது.முதல் பாகத்திலிருந்து இறுதி பாகம் வரை இந்த நூலில் உள்ள அனைத்து இடங்களுக்கும் ஏதோ நானே நேரில் சென்று தொட்டுப்பார்த்ததாகவே உணர்கிறேன்.அவ்வளவு வர்ணனை.துரோனரின் இளமை பருவம் முதல் அவர் ஆசிரியர் ஆகும் வரை உள்ள காலம் ,அவர் வாழ்ந்த இடத்தின் வர்ணனை இன்றும் பசுமையாக என் கண்முன் உள்ளது.அவர் இளமைபருவம் படிக்கும் போது கொஞ்சம் பரிதாபமாக இருந்தது.
வெண்முரசில் கிருஷ்ணர்(இளைய யாதவர்) எனக்கு எவ்வளவு பிடித்ததோ அதே அளவிற்க்கு கணிகரையும் பிடித்தது.இளைய யாதவர் சகுனியை பார்த்து பேசும் போது சாத்யகியையும் கூட்டிசென்று கணிகரையே பார்க்கும் படி சொல்லுமிடத்தில் சிரித்துக்கொண்டேதான் படித்து முடித்தேன்.
கங்கை வெண்முரசு முழுவதும் வருகிறது.அதில் வரும் கப்பல்களும் படகுகளும் அவை துறைமேடை மேல் வருவதும் போவதும் , துறை மேடையில் இறங்குபவர்கள் அங்கிருக்கும் குதிரையை எடுத்து செல்வதும் எனக்கு ஒரு திரைக் காவியம் போல் கண்முன் விரிகிறது.
நாவல் முழுவதும் வரும் சூதர்கள்.அவர்கள் எப்போது வருவார்கள் முழவை எடுப்பார்கள் என்று நான் காத்துக்கொண்டிருப்பேன்.கண்டிப்பாக ஒரு கிளைக் கதை வரும் என்று தெரியும்.அவர்கள் கதை சொல்லத் தொடங்கும் போதும் கதை முடியும் போதும் உண்மையிலேயே எனக்கு முன் ஒரு சூதர் அமர்ந்திருப்பதாகவே உணர்வேன்.வெண்முரசிற்க்கு பிறகு நானே ஒரு விஷயத்தை மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதிலும் புரியவைப்பதிலும் பெரிய மாற்றத்தை உணர்கிறேன்.சூதர்களுக்கு நன்றி !!மூலபாரதத்தில் போருக்கு முன் அர்ஜுனன் மட்டும் கண்ணனிடம் அறிவுரை பெருவான்(பகவத்கீதை).ஆனால் வெண்முரசில் எமன்,கர்ணன்,பீக்ஷ்மர்,சகுனி,விதுரர் ,இன்னும் சிலர் அவரை சந்தித்து அறிவுரை பெருவார்கள்.அதில் எமன் வரும் நிகழ்ச்சி அபாரம்.
வெண்முரசை படித்ததால் நான் பெற்றுக்கொண்டவை ஏராளம்.முதன்மையாக மகாபாரதம் முழுவதும் தெள்ளத்தெளிவாக எந்த சந்தேகமும் இல்லாமல் தெரிந்து கொண்டேன்.ஏறத்தாழ இப்படித்தான் மகாபாரதம் நடந்திருக்கும் என்பதைப் போல மிக யதார்த்தமான கதைப்போக்கு மற்றும் கதை விவரிப்பு.இரண்டாவதாக மகாபாரத கிளைகதைகள் அனைத்தும் மிக விரிவாக அழகாக சொல்லப்பட்டுள்ளது.இதில் மகாபாரத கதையுடன் சொல்லப்படாத பிற விஷயங்களேயில்லை என்பதைப் போல சமையல்,உணவுபரிமாறல்,அரசியல்,சமையற்கலை(makeup),crowd management,ஓற்றர்,நீர்வழிப்போக்குவரத்து என அனைத்து துறைகளையும் விவரித்திருக்கிறார்.பாரதபோர் முடிவிற்கு பிறகு ஒரு புதிய நாடு எவ்வாறு உருவாகிறது அங்கு மக்கள் எவ்வாறு குடியேருகிறார்கள் என்பதை அழகாக விவரித்திருப்பார்.எனக்கு அமெரிக்காதான் ஞாபகம் வந்தது.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆழமாக சித்தரித்து அவர்களை psyco analysis செய்து அவர்களின் துயர்,மகிழ்ச்சி,ஆணவம் எதனால் என்பதை அவர்களுக்குள் ஊடுருவி அந்த உணர்ச்சிகளின் வேர் காரணத்தை தொட்டுப்பார்க்கிறார் ஆசிரியர்.கண்டிப்பாக அந்த கதாபாத்திரமாக தன்னை மாற்றிக்கொண்ட ஒருவரால்தான் இப்படி எழுத சாத்தியம்.
நாவல் முழுவதும் வரும் முறைமை.எவர் ஒருவர் மற்றவரை சந்திக்கவேண்டுமென்றாலும் அவரிருக்கும் இடம்வரை வந்து முன்னனுமதி பெற்ற பின்னரே அவரை சந்திக்க இயலும்.அரண்மனை,காடு,தவகுடில் என எந்த இடமானாலும் இந்த முறைமை கடைப்பிடிக்கப்படுகிறது.
நாவலின் மற்றொரு சிறப்பு நல்லவர்,கெட்டவர் என்ற எளிய வகைப்பாடுகளே இல்லை.அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் காலமும், சூழ்நிலையும்,முந்தைய நிகழ்ச்சியின் தொடர்ச்சியுமே காரணம்.நம்மையே எடுத்துக்கொள்வோம்.நாம் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை நம்மால் உறுதியாக சொல்லிவிட முடியாது.நாம் செய்யும் பல செயல்கள் திட்டமிடாமல் சூழ்நிலைக்கேற்ப நாம் செய்வோம்.நம்மை பகுப்பாய்வு செய்தால் நாம் நல்லவர்களா கெட்டவர்களா என்பதை சொல்லிவிடமுடியாது.அதே போல்தான் வெண்முரசில் வரும் கதாபாத்திரங்கள்.
வெண்முரசு போன்ற மிகப் பெரிய நாவல் வரிசைக்கு இவ்வளவு சிறிய விமர்சனம் எழுதுவது மனதிற்க்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது.நான் வெண்முரசு படிக்க ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு மேலாகிறது.அனைத்து பாகங்களையும் படித்து முடித்தே சில பல ஆண்டுகள் ஆகின்றன.நான் படிக்க ஆரம்பித்தபோது blog திறப்பதைப் பற்றியோ அதில் நூல் விமர்சனம் எழுதுவதைப் பற்றியோ சிந்தித்ததேயில்லை.வெண்முரசு படிக்கும் போது இரண்டு நோட்டுகள்(160 பக்கம்) முழுவதும் குறிப்புகள் எடுத்துக் கொண்டேன்.ஆனால் அவை தகவல் குறிப்புகள் மட்டுமே,விமர்சன குறிப்புகள் அல்ல.திறனாய்வு செய்யுமளவிற்க்கு மீண்டும் வெண்முரசை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. பார்க்கலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக