இந்த வருடம் நான் படித்த மிகச் சிறந்த நாவல் என்றால் அது இதுதான்.மிகச் சிறந்த நாவல்.கொஞ்சம் கூட மிகையில்லாமல் யதார்த்தமாக வங்கத்தின் கிராமிய வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டுகிறார்.நாவல் முழுவதும் சிறுவர்கள் பார்வையிலேயே எழுதப்பட்டுள்ளதால் சாதாரணமாக தெரியும் விஷயங்களும் அசாதரணமாக ஆகிவிடுகின்றன.
இந்த நாவலில் வரும் கதாபாத்திரங்கள் இனி என் வாழ்நாள் முழுக்க என்னுடனேயே இருக்கப் போகிறார்கள்.துர்காவும் ஓப்புவும் குழந்தைகள்.இவர்களை எல்லோருக்கும் பிடிக்கும்.எனக்கும்தான்.அதைவிட இவர்களின் தாயான சோர்போச்யாதான் எனக்கு பிடித்த கதாபாத்திரம்.வயதானவர்களின் வலியை நிற்கதியை அழுத்தமாக பதிவு செய்யும் நாவல்.18/19ம் நூற்றாண்டில் வறுமை எவ்வாறு ஒவ்வொரு குடும்பத்தையும் வதைத்திருக்கும் என்பதை உணர்த்தும் நாவல்.
ஒன்றுமே இல்லாத நிலையிலும் மகிழ்ச்சியாக வாழ்வதெப்படி என்பது குழந்தைகளான ஓப்பு மற்றும் துர்காவினால்தான் முடியும்.நாவல் படிக்கும் போது மூன்று இடங்களில் நான் அழுதுவிட்டேன்.துர்காவின் மரணம்,ஓப்பு அருகிலுள்ள கிராமத்திற்கு சென்று அங்கு சந்திக்கும் அந்த சிறுப்பெண், அவளை விட்டுப்பிரியும் தருணம்,அந்த ஊர் ஜாத்ராவில் நடிக்கும் சிறுவன் தன்னிடம் உள்ள ஐந்து ரூபாயை துர்காவின் திருமணத்திற்கு சேலை வாங்கி கொள்ளுமாறு சொல்லும் தருணம்.இவை எதுவும் ஓவர் சென்டிமெண்டாக சொல்லப்படவில்லை.
சோர்போச்யா கடைசிவரை கஷ்டத்தில்தான் இருக்கிறாள்.அவள் எதிர்பார்த்த பொற்காலம் கடைசிவரை வரவேயில்லை.ஒரே மகிழ்ச்சி ஓப்பு மட்டும்தான்.
இந்த நாவலை படித்துமுடித்தவுடன் சத்யஷித்ரே இயக்கிய படத்தை பார்த்தேன்.படம் நன்றாக இருந்தது.ஆனால் நாவலிலிருந்து சில மாற்றங்களை செய்துள்ளார்.ஹோரிஹர் குடும்பம் ஊரை விட்டு வெளியேறுவதுடன் படம் முடிகிறது.இரயிலில் பயணம் செய்வது, காசி வாழ்க்கை,காசிக்கு பின்னான வாழ்க்கை படமாக்கப்படவில்லை.படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் நடிகர் தேர்வும் கச்சிதம்.அனைவருமே பிரமாதமாக நடித்துள்ளனர்.அந்த பாட்டியாக வருபவர் அசத்தியிருக்கிறார்.ஆனாலும் படத்தை விட நாவல்தான் பிரமாதம்.
வங்க இலக்கியத்தை பற்றி ஏன் பெரிதாக பேசுகிறார்கள் என்பது இந்த நாவலை படித்தவுடன்தான் புரிந்தது.இது தான் நான் படித்த முதல் வங்க மொழி படைப்பு.இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ரிமி(Rimi)க்கு வாழ்த்துகள்.
கருத்துகள்
கருத்துரையிடுக