இந்த குறுநாவலைப் படித்தது ஒரு திரைப்படம் பார்த்ததைப் போன்று காட்சிகள் கண்முன் விரிகின்றன.படு விறுவிறுப்பான நாவல்.நான் பல முறை விமானத்தில் பயணித்திருக்கிறேன்.பல நாட்டு விமான நிலையங்களில் சுற்றியிருக்கிறேன்.ஆனாலும் இதில் வரும் விமான நிலைய வருணிப்பு சுவாரஸ்யமாகவே இருந்தது.எப்போதும் எனக்கு விமானப்பயணம் களிப்பூட்டுவதாக இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளாத சிறு பயமும் உண்டு.அந்தரத்தில் பறக்கும் விமானம் சிறிது நடுங்கினாலும் பயம்.ஐரோப்பாவிலிருந்து அமெரிக்கா செல்லும் போது ஆறு மணிநேரம் கடலுக்கு மேலேயே பயணம் செய்யும் போதும் பயம்.அந்த வரிசையில் தீவிரவாதிகளின் கடத்தல் பற்றிய பயமும் சிறிதளவு உண்டு(இது நிறைய திரைப்படம் பார்ப்பதால் வரும் விளைவு என நினைக்கிறேன்).
இந்தக் கதையில் வரும் விமானம் பறக்கவேயில்லை.கடத்தப்பட்டும் தரையிலேயே இருக்கிறது.இந்தக் கதையில் எவ்வளவு கற்பனை எவ்வளவு உண்மை என்று சொல்ல முடியாத அளவிற்கு நுட்பமான விவரணை.தங்கம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எவ்வாறு எடுத்துச் செல்லப்படுகிறது, அங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்ற செய்திகள் எனக்கு புதியவை.
உண்மையில் ஒரு கடத்தல் எவ்வாறு தொடங்கி எவ்வாறு முடிகிறது, திரைமறைவில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்னென்ன என்பதை இக்கதை தெளிவாக விவரிக்கிறது.இந்தக் கதை படித்தபின் நம் நாட்டின் மேலான மதிப்பு கண்டிப்பாக உயரும்.
இந்த நாவலில் எங்கும் தேய்வழக்குகளே இல்லை.ஆனால் இந்தக் கதையில் வரும் தீவிரவாதிகள் கடைசியில் இவ்வளவு முட்டாள்களாக இருப்பார்களா என்பது சிறு உறுத்தலாக உள்ளது.மற்றபடி சுவாரஸ்யமான நாவல்.
கருத்துகள்
கருத்துரையிடுக